பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு – தனித்து விடப்பட்ட பச்சிளம் மகன்

புது வாழ்வு,புது உலகம் என கணவனுடன் கனடா வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் தாலி கட்டிய கணவனால் துன்புறுத்தப்பட்ட நிலையில் , பெண்களை வெறுக்கும் ஒருவரால்  பரிதாபகரமாக உயிரிழக்க அவரது பச்சிளம் பாலகன் அநாதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது தான் துயரம்.

அவரின் துயர வாழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2010ஆம் ஆண்டு, பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, கணவருடன் கனடா வந்தடைந்தார் ரேணுகா அமரசிங்க (45). ஆனால், கனவுகளுடன் வந்த வாழ்க்கை மலர்ப் படுக்கையாக அவருக்கு இருக்கவில்லை. விரைவில் காவல் நிலையத்தை நாடிச் செல்லவேண்டிய ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது.

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவர் துன்புறுத்துவதாக அவர் புகாரளிக்க, அவரது கணவரை கைது செய்துள்ளார் லாரா (Laura Middleton) என்ற பெண் காவல்துறை அதிகாரி. அப்போதிருந்தே, தனிமையில் விடப்பட்ட ரேணுகாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார் லாரா.

ரேணுகா தன் கணவரை விவாகரத்து செய்ய, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரேணுகாவின் மகன் Diyon பிறந்திருக்கிறான். தனி ஆளாக மகனையும் வளர்த்தபடி, தானும் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார் ரேணுகா.

பின்னர் Toronto District School Boardஇல் ஒரு வேலையும் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில், தனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உதவிய காவல் நிலையத்துக்கு தன் மகனுடன் சென்று, தனக்கு உதவிய காவல்துறையினருக்கு நன்றி கூறுவது ரேணுகாவின் வழக்கமாம்.

எமனாக வந்த மற்றொரு ஆண்

இந்தநிலையில்,ரேணுகாவின் வாழ்வில் எமனாக வந்திருக்கிறார் மற்றொரு ஆண். தனக்குப் பழக பெண் கிடைக்காத வெறுப்பில், வான் ஒன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது மோதியிருக்கிறார் அலெக் மின்னேசியன் என்னும் அந்த நபர்.

அந்த வான் மோதியதில் 10 பேர் ஸ்தலத்தில் கொல்லப்பட, 16 பேர் படுகாயமடைந்தார்கள். அந்த விபத்தில் பலியான பெண்களில் ரேணுகாவும் ஒருவர். தன் மகனை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்ற கனவில் தனி ஆளாகப் போராடிய ரேணுகா, அவனைத் தனியே விட்டு விட்டுப் போய்விட்டார்.

 

 

 

IBC Tamil