இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவை எப்போதும் மதிக்கிறோம் – வெள்ளை மாளிகை

இந்தியா உடனான நல்லுறவுக்கு என்றும் மதிப்பளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் கூறியது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. அதை மீறி, இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்குகிறது.

இதனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி ரஷியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை பாதுகாப்பு கவுன்சில் அமைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. இந்தியா உடனான பரஸ்பர நல்லுறவுக்கு அமெரிக்கா எப்போதும் மதிப்பளித்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மையை காப்பதிலும், சொந்த முடிவுகளை எடுப்பதிலும் சுதந்திரம் உள்ளது. ரஷியா மீது சர்வதேச அளவில் அதிக நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். ரஷிய அதிபர் புதின் தன் செயலுக்கு தக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

Malaimalar