உக்ரைன் நாட்டில் வணிக வளாகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் காயம்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக உக்ரைன் அதிபர் தகவல் அதிக கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் பகுதியில் உள்ள வணிக வளாகம் மீது ரஷிய படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ லுனின் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் தொடங்குவதற்கு முன்பு கிரெமென்சுக் நகர பகுதியில் 2,20,000 மக்கள் வசித்ததாகவும், அந்த நகரத்தை ஏவுகணைகள் தாக்கியபோது, ​​ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வணிக வளாகத்தில் இருந்ததாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

வணிக வளாகம் தீப்பற்றி எரிகிறது, மீட்புப் படையினர் தீயை அணைக்க போராடுகிறார்கள், பலியானவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்க இயலாது என்று ஜெலன்ஸ்கி தமது சமூக வளைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வணிக வளாகத்தில் அதிக மக்கள் கூட்டம் இருந்த போது குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்த ரஷிய படைகள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

 

Malaimalar