சிலாங்கூரில்  எதிர்கட்சியாக இருந்தது போதும், கைபற்றுவோம் – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் எதிர்க்கட்சியாக இருப்பதில் தேசிய முன்னணி  “சோர்வாக உள்ளது” என்றும் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் அதன் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கூறினார்.

இன்று ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் தேசிய முன்னணி மாநாட்டில் பேசிய நஜிப் (மேலே) 2008 வரை அம்னோவால் தலைமை தாங்கப்பட்ட மாநிலம், கடந்த 14 ஆண்டுகளாக பிகேஆர் தலைமையிலான மத்திய எதிர்க்கட்சி கூட்டணிகளால் ஆளப்பட்டது என்று புலம்பினார்.

“பிஎன் உறுப்பினர்கள், அடிமட்டத்திலிருந்து தலைமை வரை அனைவரும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் போராடுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

“நாம் நெகிழ்வாக இருக்கக்கூடிய வழிகள் உள்ளன, அதனால் நாம் வெற்றி பெற முடியும்.”

“அதற்கு அதிக நேரம் தேவையில்லை. குறுகிய காலத்தில் இயலும், ”என்று அந்த பெக்கன் எம்.பி கூறினார்.

2008ல் பக்காத்தான் ராக்யாட் பொறுப்பேற்றதில் இருந்து சிலாங்கூரில் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட மெதுவாகவே இருந்தது என்றும் அவர் கூறினார். முந்தைய கூட்டணியில் இருந்து பாஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, மாநிலம் இப்போது பக்காத்தான் ஹராப்பானால் ஆளப்படுகிறது.

லங்காட் II நீர் சுத்திகரிப்பு ஆலை திட்டம் தொடர்பான சர்ச்சைகளை மேற்கோள் காட்டி, மாநில அரசுக்கு மத்திய அரசாங்கத்துடன் “புரிதல்” இல்லை என்று நஜிப் கூறினார்.

அம்னோ மற்றும் PAS இன் சில பிரிவுகள், மாநிலத்தில் ஹராப்பானின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர சிலாங்கூரில் பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பிஎன் கூட்டணிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் மலேசியாவின் மிகவும் வளர்ந்த மாநிலமாகும், மேலும் ஹருன் இட்ரிஸ் மற்றும் கிர் தோயோ போன்ற ஊழல் கறை படிந்த அம்னோ மாநில அரசாங்கத் தலைவர்கள் பலரைக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது, ​​மற்றொரு முன்னாள் மந்திரியான முகமட் பின் முகமாட் தாயிப் மில்லியன் கணக்கான பணத்தைக் ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டுவர முயன்றபோது பிடிபட்டார்.

BN மாநாடு பாங்கிட் சிலாங்கூர் (எழுந்து சிலாங்கூர்) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ளது மற்றும் ஊழலுக்காக விசாரணையில் இருக்கும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் முடித்து வைக்கப்படும்.

இதற்கிடையில் நஜிப், SRC இன்டர்நேஷனல் வழக்கில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய இருமுறை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். பெடரல் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கின் இறுதி மேல்முறையீடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.