நோட்டாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.29 கோடி ஓட்டு கிடைத்தது

நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

தேர்தல்களின்போது போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யும் வகையில், நோட்டா என்ற முறை 2013-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 முதல் 2022 வரை நடந்துள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகள் குறித்து ஏ.டி.ஆர். எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு மேற்கொண்டது.

அதில், கடந்த 5 ஆண்டுகளில் நோட்டாவுக்கு மொத்தம் 1 கோடியே 29 லட்சம் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

சட்டசபை தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் மட்டும் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975. இதன் சதவீதம் 1.06 ஆகும். சட்டசபை தேர்தல்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுகள்தான், நோட்டாவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுகள் ஆகும்.

மிசோரமில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கிடைத்த 2 ஆயிரத்து 917 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் கிடைத்த 51 ஆயிரத்து 660 ஓட்டுகள்தான் அதிகபட்ச ஓட்டுகள். லட்சத்தீவு தொகுதியில் கிடைத்த 100 ஓட்டுகள்தான் குறைந்தபட்ச ஓட்டுகள் ஆகும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

-mm