இங்கிலாந்தில் இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்

இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையர் பகுதியிலுள்ள இந்துக் கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து கோவில் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனிடையே லீசெஸ்டர்ஷையர் பகுதியில் அமைந்துள்ள இந்து கோவில் ஒன்றுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், இந்து கோவில் கட்டிடத்தின் மேல் ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர்.
இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் லீசெஸ்டர்ஷையர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து அதிகாரிகளிடம் இந்த விவகாரம் பற்றி எடுத்துச் சென்றுள்ளோம்.

இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது. லீசெஸ்டர் வன்முறை தொடர்பாக போலீசார் இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.

 

-mm