பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை!

இலங்கையில் மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மதகுருமார்கள், மூவின மக்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தளம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டம் புத்தளத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி ஊர்த்தி வழி கையெழுத்துப் போராட்டமொன்று நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் புத்தளம் தபால் நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம் இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகளும் குறித்த கையெழுத்து சேகரிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வழு சேர்க்கும் முகமாக கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தளத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் சிங்கள மூவின மத மக்களும் கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கி தத்தமது கையொப்பங்களையிட்டனர்.

 

 

-tw