சிரியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது- 77 பேர் உயிரிழப்பு

லெபனானில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழிப் பயணம். மீட்கப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.

லெபனான் நாட்டில் பவுண்ட் மதிப்பு 90% க்கும் கீழ் குறைந்ததால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர், இதனால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கடும் வாழ்வாதார போராட்டங்களை சந்தித்து வருகின்றன.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். இதனையடுத்து அண்டை நாடுகளில் அவர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லெபனானில் இருந்து சிரியாவிற்கு 100-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று சிரியாவின் கடற்கரை நகரமான டார்டவுஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது. அந்த படகில் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்தவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிரியா கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 77 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

-mm