வறுமைக் கோட்டின் கீழ் 26 இலட்சம் குடும்பங்கள்

நாட்டில் உள்ள 68 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை கலால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

68 இலட்சம் குடும்பங்களில் 17 இலட்சம் பேர் சமுர்த்தி பயனாளிகள் எனவும் மேலும் 7 இலட்சம் பேர் சமுர்த்தி நன்மைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது மதுபானத்திற்கு 75 சதவீத வரியும், சிகரெட்டுக்கு 65 முதல் 75 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக அமைச்சர்  தெரிவித்தார்.

அரச வருமானம் குறைந்த நாடாக இலங்கை

அரச வருமானம் நாட்டிலேயே மிகக் குறைந்த நாடாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டதுடன், அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் தென்னை, பனை போன்றவற்றின் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், சகல துறைகளிலும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அத்தியாவசியமற்ற உணவு மற்றும் பொருட்களை இறக்குமதி செய்வதை முடிந்தவரை நிறுத்த வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், பொருட்கள், மருந்துகள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு டாலர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

 

 

-tw