ஒரு சதம் கூட செலவு செய்யாமல் ஒரே நாளில் பொதுத் தேர்தலை நடத்த முடியும்:ஹர்ஷ தகவல்

உள்ளூராட்சி மற்றும் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று(15.11.2022) பரிந்துரைத்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போது இதனை தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் பொதுத் தேர்தல்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“காங்கிரஸுக்கும் செனட் சபைக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் அமெரிக்க முறையை இலங்கை பின்பற்ற வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எங்களிடம் தெரிவித்தார். ஒரு சதம் கூட செலவு செய்யாமல் ஒரே நாளில் பொதுத் தேர்தலையும் நடத்த முடியும்.

செனட் மற்றும் காங்கிரஸுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் அமெரிக்க முறையை நாம் பின்பற்றலாம்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். எனவே புதிய நாடாளுமன்றத்தை உருவாக்குவோம்.

பிரமிட் திட்டம்

பொருளாதார தாராள மயமாக்கலுக்கு வரும்போது நீங்கள் நன்றாகச் செய்தீர்கள், ஆனால் அரசியல் தாராள மயமாக்கல் எங்கே? இலங்கையின் சனத்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திறைசேரி உண்டியல்களுக்கான மூன்று மாத வட்டி விகிதங்கள் 33 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது கிட்டத்தட்ட ஒரு பிரமிட் திட்டமாகிவிட்டது. ஒரு நாடு இந்த முறையில் இயங்க முடியாது”என தெரிவித்துள்ளார்.

 

 

-tw