உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் – விஞ்ஞானிகள் தகவல்

உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா மாறும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் இந்த விபரங்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் பதிவான வெப்பம் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் டெல்லியின் வெப்ப நிலை 114 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இது மிக அதிக வெப்பநிலை ஆகும். இதுபோல நாட்டின் பல முக்கிய நகரங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற வெப்பம் காரணமாக இந்தியாவில் பல ஆயிரம் பேர் பலியானதையும் விஞ்ஞானிகள் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்தியாவில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாட்டின் தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவின் 75 சதவீத தொழிலாளர்கள் வெப்பம் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறார்கள். நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்தால் இவர்களின் உழைப்பு பாதிக்கப்படும். இது நாட்டின் தொழில் வளத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-mm