குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை, பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி கொஸ்டின்’ என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி, 23-ந் தேதி ஒலிபரப்பாகிறது.

இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி. இம்ரான் உசைன் இதுபற்றி கேள்வி எழுப்பினார். பி.பி.சி. ஆவணப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று அவர் கேட்டார்.அதற்கு பிரதமர் ரிஷி சுனக், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:- எந்த நாட்டில் மக்கள் துன்புறுத்தப்பட்டாலும் நாம் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த ஜென்டில்மேன் பற்றி முன்வைக்கப்படும் அனைத்து கருத்துகளிலும் எனக்கு உடன்பாடு இருப்பதாக கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

-dt