இந்தியா திணித்த 13 ஆவது திருத்தம் வேண்டாம்

இந்தியாவால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என இரண்டு பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் அதிபர், பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

காவல்துறை – காணி அதிகாரங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

காவல்துறை – காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

13வது திருத்தம் இந்தியாவால் திணிக்கப்பட்டது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது இலங்கை நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அந்தக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பின்றி

எனவே 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியமானது. இந்தநிலையில் அதிபர் உட்பட அமைச்சரவையில் உள்ள எவரும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்கான எந்தவொரு மூலோபாயத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

-ib