சிரியாவில் தாக்குதல் 53 பேர் பலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது அரசு குற்றச்சாட்டு

சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், “அல்-சோக்னா நகரின் தென்மேற்கில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. இதில் 53 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பால்மைரா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பலியானவர்களின் உடல்களில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “கொல்லப்பட்டவர்களில் 46 பேர் பொதுமக்கள். 7 பேர் ராணுவ வீரர்கள். பலியானவர்களின் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தன. காயமடைந்தவர்களில் சிலர் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

 

 

-th