சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒரு முழுமையான தீர்வல்ல: டக்ளஸ் தேவானந்தா

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை எமக்கான முழுமையான விடியலாக கருதி விடக்கூடாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்பில் அதிபர் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பமாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும் எனவும் அவர் சபையில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உட்பட ஏனைய நிதி நிறுவனங்கள், நாடுகளிடமிருந்து மொத்தமாக 07 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை கடனாக பெற்றுக் கொள்ள முடியுமென்ற தகவலை அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.

நிதியத்தின் கடன்

இந்த கடன்கள் தொடர்பில் எவரும் வெற்றிக்களிப்பில் மயங்கி விடக்கூடாது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மூச்செடுக்கக்கூடிய சந்தர்ப்பமாக மட்டுமே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இதை முழுமையான விடியலென நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் – மூன்று தசாப்த யுத்தம், கொரோனா, அதனையடுத்து பொருளாதார நெருக்கடி, ரஷ்யா – உக்ரைன் யுத்தம் என பல்வேறு பாதிப்புகளை நாடு எதிர்கொண்டதை அனைவரும் அறிவோம்.

உரிமை போராட்டமானது இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப் பின்னர் அழிவு போராட்டமாக உருவெடுத்தது. அந்த அழிவுப் போராட்டம் எமது மக்களின் சொத்துக்களையும் வளங்களையும் அழித்து விடுவதோடு எம்மையே அழித்துவிடும்.

வன்முறை தீர்வு

வன்முறைக்கூடாக எம்மால் எதையும் சாதிக்க முடியாது என்ற நிலையில் பேச்சுவார்த்தைக் கூடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென நான் வெளிப்படையாகவே அறிவித்திருந்தேன்.

சொற்படி கேளாதவர்களாக, அவர்கள் எனது கருத்துக்களை அறிந்தும் அறியாதவர்களாக அரசியல் நடத்தி எமது மக்களின் அழிவுக்கு வழி வகுத்தனர். வன்முறை வழியிலேயே தொடர்ந்தும் செயற்பட்டனர்.

இதற்கு குரல் எழுப்பியும் மௌனமாகவும் ஆதரவளித்த சக தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw