இந்துக்களை மதமாற்றம் செய்யும் எச்யுடி இஸ்லாமிய அமைப்பு

பிரதேசத்தில் செயல்படும் எச்யுடி இஸ்லாமிய அமைப்பு இந்துக்களை மதமாற்றம் செய்து வருவதாக மாநில தீவிரவாத தடுப்புப் படை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் செயல்படும் ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (எச்யுடி) என்ற பழமைவாத இஸ்லாமிய அமைப்புக்கு சீனா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 16 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதனுடன் தொடர்புடையவர்கள் ஹைதராபாத்தில் தங்கியிருப்பதாகவும் மத்திய உளவு அமைப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு ரகசிய தகவல் கொடுத்தது.

இதன் அடிப்படையில், மத்திய பிரதேச தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்), மத்திய உளவுத் துறை மற்றும் தெலங்கானா போலீஸாரின் உதவியுடன் ஹைதராபாத்தில் தங்கியிருந்த 16 பேரை கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். இவர்களில் 11 பேர் போபாலைச் சேர்ந்தவர்கள். 5 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை 19-ம் தேதி வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க ம.பி. தீவிரவாத தடுப்புப் படையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், எச்யுடி அமைப்பினர் மதமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் இந்துக்களாக இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி உள்ளனர். இவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “கைது செய்யப்பட்ட முகமது சலீம் என்பவரின் உண்மையான பெயர் சவுரவ் பரத்வாஜ் என்றும் அப்துர் ரஹ்மான் என்பவரின் உண்மையான பெயர் தேவி பிரசாத் பாண்டே என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் முகமது சலீம் என்பவர் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி நடத்தி வரும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்” என்றார்.

அனுமதிக்க மாட்டோம்

இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர்கள் உடற்பயிற்சி மைய ஊழியராகவும், ஆட்டோ ஓட்டுநராகவும், டெய்லராகவும் பணிபுரிந்து கொண்டு மதமாற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தங்களிடம் வருபவர்களை மூளைச் சலவை செய்து அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதுதான் இவர்களுடைய பணியாக இருந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கேரளா ஸ்டோரி போன்ற சம்பவம் நடைபெற அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

 

 

-th