இருமல் மருந்துகளை பரிசோதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

இந்தியாவில் 3 ஆயிரம் மருந்து கம்பெனிகளும், 10 ஆயிரத்து 500 மருந்து உற்பத்தி கூடங்களும் உள்ளன. அங்கு தரமான, விலை மலிவான மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மருந்து உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. உலகளாவிய தடுப்பூசி தேவையில் 50 சதவீதத்தை இந்தியாதான் பூர்த்தி செய்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் பலியானார்கள். அதற்கு இந்தியாவில் தயாரான இருமல் மருந்துகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால், இந்திய இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகளிடையே அச்சம் நிலவியது. இந்த பின்னணியில், இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அரசாங்க ஆய்வுக்கூடத்தில் அவற்றை பரிசோதனை செய்வது கட்டாயம் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் கடந்த22-ந் தேதி அறிவித்தார். இந்த நடைமுறை, ஜூன் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி, மாநிலங்களின் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், மத்திய ஆய்வுக்கூடங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்யபரிசோதனை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, இருமல் மருந்து கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை உயர் முன்னுரிமை அளித்து பரிசோதனை செய்யுமாறும், விரைவிலேயே பரிசோதனை அறிக்கையை அளிக்குமாறும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங் களுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

-dt