ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை

ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவமானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19-ம் தேதி ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கூறுகையில், சட்டப்படி வெளிப்படையாக விசாரணை நடந்திருந்தால்கூட ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,200 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசாரணை நியாயமாக நடப்பதில்லை, சிறு குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்பது ஈராக் மீதான பொதுவான குற்றச்சாட்டுகள்.

சாதாரண குற்றங்களுக்குகூட மரண தண்டனை வழங்கப்படுவது சதாம் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது, கருத்து சுதந்திரத்தை பறிப்பது, சந்தேக குற்றவாளிகளை ரகசிய சிறையில் அடைத்து சித்ரவதை செய்வது ஆகியவற்றில் ஈராக் படையினர் ஈடுபடுவதாக சமீபத்தில் புகார் எழுந்தது.

இதையடுத்து சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொள்ள கூடாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரிக்கை விடுத்த 2 நாளில், 34 பேர் தூக்கில் இடப்பட்டிருக்கின்றனர்; இது கண்டிக்கத்தக்கது என்றார்.