“ஓட்டுப் போட பணம் கேட்டால் கன்னத்தில் அடி கொடுங்கள்”: ராமதாஸ்

“தேர்தல் செலவுக்கும், ஓட்டுப் போடவும் பணம் கேட்டால் அவர்களது கன்னத்தில் பளார் என அடி கொடுங்கள்,” என்று ஓசூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

அக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராமதாஸ்; “கடந்த 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது, நான்கு எம்.எல்.ஏ. ஆசனங்களை பிடித்தோம். கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து மூன்று எம்.எல்.ஏ. ஆசனங்களைத் தான் பிடித்துள்ளோம். அ.தி.மு.க.,வுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி அமைத்து, நாம் பெற்ற பயன் இது தான். அதனால், பா.ம.க-வை மக்கள் கேலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.”

“பா.ம.க-வை தோற்கடிக்க, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., – அ.தி.மு.க.,வினர், எழுதப்படாத மறைமுக கூட்டணி அமைக்கின்றனர். அவர்கள், பா.ம.க., தயவால் வெற்றி பெறுகின்றனர். அதனால், வரும் தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் மக்களை நம்புவோம்.”

“பா.ம.க-வை விட உயர்ந்த கொள்கை, கோட்பாடு உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டனர். தேர்தல் செலவு என்பது, ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தல் செலவுக்குப் பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வேரோடு அகற்றுவதே, பா.ம.க., வின் முதல் வேலை.” இவ்வாறு ராமதாஸ் பேசினார். இந்த பேச்சு, பா.ம.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.