பொதுமக்கள் கொல்லப்படுவதை உலகம் அறிந்திருந்தது : விக்கிலீக்ஸ்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந்தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருந்தபோதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக்கொண்டன என்று பிபிசிக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, தான் இலங்கை குடியரசுத் தலைவரின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ஷ அவர்களிடம் எழுப்பியதாக, கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத்தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பசில் ராஜபக்சே வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5-ம் தேதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக  அனைத்துலக சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.

பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.

ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் பல பொதுமக்களைக் கொன்றதாகவும், அத்தகைய தாக்குதல்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.

இந்தத் தகவல்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.

பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சேவுடனான இரு அண்மைய சந்திப்புக்களின்போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக பசில் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்த விசயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வே தூதுவர் கூறியிருக்கிறார்.

ஆனால், மிக மோசமான மனித நேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்ததாகவும், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குவதற்கு அப்பால், தமது முன்னைய கரிசனைகள் பலவற்றுக்கு இலங்கை சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த நாடுகள் கூறியதாகவும் அமெரிக்க தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளது.