பெர்த் பயணம், பல கேள்விகளை எழுப்புகிறது

“எந்த நாட்டிலும் சுதந்திர நாளில் நாட்டின் தலைவர் காணமல்போயிருக்க மாட்டார். எல்லா வகை தப்புத் தவறுகளுக்கும் மலேசியாதான் முன்மாதிரி”.

நஜிப்பின் பேச்சு ஊக்கமூட்டியது என்றார்கள் பெர்த் மாணவர்கள்

கவனிப்பாளன்: பிரதமர் நஜிப்பும் அவரது கையாள்களும் மீண்டும் தவறு செய்கிறார்கள். அல்டான்துயா ஷாரீபு கொலையில் நஜிப்புக்குத் தொடர்புண்டு என்று கூறப்பட்டபோது தமக்குத் தொடர்பில்லை என்று காண்பிக்க குர் ஆனில் சத்தியம் செய்தார்.

பின்னர் சைபூல் புகாரி அஸ்லானை அவர் சந்தித்தார் என்று சொல்லப்பட்டபோது, சைபூல் உதவிச்சம்பளம் கேட்டுத் தம்மைச் சந்திக்க வந்ததாக ஒரு நொண்டிக் காரணத்தைக் கூறினார்.

ரோஸ்மாவுக்கு ரிம24 மில்லியன் பெறுமதியுள்ள வைர மோதிரம் அமெரிக்காவிலிருது வந்தது என்று கூறப்பட்டு அதற்கு ஆதாரமாக சுங்கத்துறை ஆவணம் முன்வைக்கப்பட்டபோது நஜிப்பின் ஆள்கள் பலமாதிரி கதை கட்டிவிட்டனர்.

இப்போது, நாட்டைவிட்டு இரகசியமாக வெளியேறி மக்களின் வரிப்பணத்தில் பெர்த்தில் விடுமுறையைக் கழித்த விசயம் வெளியில் தெரிந்ததும் அப்பயணத்துக்குக் கூறப்படும் காரணம்: “நஜிப், அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது முட்டிக்கு உடலியல் மருத்துவ (Physiotherapy) சிகிச்சை பெறுவதற்காக பெர்த் சென்றார்”.

ஐயா, உடலியல் மருத்துவம் என்பது ஒரு எளிய சிகிச்சை முறைதான். மலேசியாவிலேயே அதைச் செய்துவிடலாம். நஜிப் மக்களின் வரிப்பணத்தில் விடுமுறை கழித்துவந்ததை மூடிமறைக்க அப்படி ஒரு கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்..

ஜெரால்ட் சாமுவேல் விஜயன்: இது அரசாங்கத்தின் இன்னொரு பரப்புரை. அந்த மாணவர்கள் அரசாங்கத்தினதும் அரசுசார்ந்த நிறுவனங்களினதும் உதவிச்சம்பளங்களில் கல்வி பயில்பவர்கள். வேறு எப்படிச் சொல்வார்கள்? மலேசிய மாணவர் துறையும் போலீஸ் சிறப்புப் பிரிவும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதை அறியாதவர்களா, அவர்கள்?

பிரதமரிடம் ஊக்கமூட்டும் பேச்சுகளுக்கும் கருத்துகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால், சொல்லப்படுவது, செய்யப்படுவதில்லை.

டேவிட் தாஸ்: நஜிப், பேசுவதுபோலவே செயல்படவும் வேண்டும். 1மலேசியாவின்மீது உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவரென்றால், நாட்டு நிர்வாகத்தின் எல்லா இடங்களிலும் மலாய்க்காரர்-அல்லாதாருக்கும் இடமளிக்க வேண்டும்.

அவரின் தந்தையார், கொம்மாடோர் கே. தன்பாலசிங்கத்தைக் கடற்படைத் தளபதி ஆக்கினார்- தனபாலசிங்கம் அந்தப் பதவிக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால். அதேபோல் மலாய்க்காரர்-அல்லாதாரில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து தூதர்களாகவும், அரசுசார்பு நிறுவனங்களின் இயக்குனர்களாகவும் அரசாங்கத் துறைத் தலைவர்களாகவும் போலீஸ், இராணுவம் போன்றவற்றில் உயர் அதிகாரிகளாகவும் நியமிக்க வேண்டும்.

மலாய்க்காரர்-அல்லாதார் தாங்களும் இந்நாட்டுக்கு உரியவர்களே என்ற உணர்வைப் பெற வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டும். அவர்கள், நாட்டுக்கு விசுவாசம் காட்ட வேண்டும், விசுவாசம் காட்ட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருத்தல் மட்டும் போதாது.

மலேசியத் தொலைநோக்கு என்பது உயர்வருமானம் பெறுவது மட்டும் அல்ல. வறுமை, சமத்துவமின்மை, ஒதுக்கிவைத்தல், துருவங்களாக பிரிந்து கிடக்கும் நிலை, திறமையின்மை, விரயம், ஊழல், அநியாயம், அநீதி போன்றவற்றுக்குத் தீர்வு காண்பதுமாகும்.

இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அதைச் செய்துமுடிக்க எல்லா மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் பாடுபடும் நிலை உருவாக வேண்டும்.

நீதிமான்: மருத்துவ சிகிச்சைக்காக சென்றார் என்கிறார்கள்.  அவரது விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக செய்தி வந்திருக்கிறது. சாங்கி இருப்பதோ சிங்கப்பூரில்.

அதிகாரிகள் கூறும் தகவல்கள் ஒரே மாதிரியாக இல்லை. எங்கேயோ இடிக்கிறதே.

விக்டர் ஜோஹன்: பெர்த்தில் உள்ள மலேசிய மாணவர்களிடம் பின்னூட்டம் பெற்று பிரசுரித்துள்ளது பெர்னாமா. பெர்னாமா சொல்வதை ஏற்போம். சரி, எத்தனை மாணவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்பதையும் தெரிவிப்பார்களா? உண்மையை, உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும்.

பிபி: உயர் தலைவர் குடும்பத்தோடு விடுமுறையில் செல்ல மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்துகிறார் என்கிறபோது மற்ற அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்கத்துறைத் தலைவர்கள், அதிகாரிகள், அலுவலகப் பையன்கள் உள்பட என்னவெல்லாம் செய்வார்கள். முன்மாதிரி தலைமைத்துவம் என்பது இதுதானா?

பில்: ஒரு முக்கியமான நாளில்-தேசிய தினத்தில்- நாட்டின் தலைவர் மக்களை ஊக்குவிக்க நாட்டில் இருக்க வேண்டாமா? என்ன தலைவர் இவர்?

எந்த நாட்டிலும் சுதந்திர நாளில் நாட்டின் தலைவர் காணமல்போயிருக்க மாட்டார். எல்லாவகை தப்புத்தவறுகளுக்கும் மலேசியாதான் முன்மாதிரி.

TAGS: