முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். சரியான பாதுகாப்பு வழங்கப்படாததுதான் அவர் கொலைக்கு காரணம் எனக் கூறி, அப்போதைய அதிபரான முஷாரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார்.

முஷாரப் மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனை முஷாரப்புக்கு தெரியப்படுத்துவதற்காக, அவர் வீட்டில் எப்.ஐ.ஆர். நோட்டீஸ் ஒட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முஷாரப் தற்போது லண்டன் மற்றும் துபாயில் வசித்து வருகிறார்.

இந்த வழக்கில் ஏற்கனவே, கடந்த மாதம் வழங்கப்பட்ட முதல் நோட்டீசுக்கு, முஷாரப் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை, அதனால் 2-வது நோட்டீஸ் அவரது வீட்டிலேயே ஒட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் தேடப்பட்டு வருவதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸ் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி இருந்தது.

ஆனால், இந்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது. மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளிடம் எந்த தனிநபரையும் ஒப்படைக்க மாட்டோம் என்று இங்கிலாந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.