இலங்கை ஜனாதிபதி தேர்தல் மோசடியாக நடத்தப்பட்டது: அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டுமே தேர்தல்  சடடங்களை மீறி  மோசடியாகவே நடைபெற்றதாக அமெரிக்காவின் மனித உரிமை  அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய மனித உரிமை நிலை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம்   வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்  வைக்கப்பட்டுள்ளன.

44 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில்,”இலங்கை பல கட்சி அரசியலமைப்பைக்  கொண்ட குடியரசு.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு ஜனவரியில்  இரண்டாவது முறையாக ஆறாண்டு பதவிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

அரசியலமைப்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடாளுமன்றம் 2010 ஏப்ரலில்  தேர்வு செய்யப்பட்டது.இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதியின் குடும்பமே ஆதிக்கம்  செலுத்துகின்றது.

ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள்,பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார  அமைச்சகம் என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர்.  மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார்.

ஜனாதிபதியின் மகன் உள்ளிட்ட பெருமளவிலான அவரது உறவினர்கள் முக்கியமான  அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர்.ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத  தேர்தல் இரண்டுமே தேர்தல் சடடங்களை மீறி  மோசடியாகவே நடைபெற்றன.

பெருமளவு அரச வளங்கள் ஆளுங் கூட்டணியால் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன.  தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச  ஆதரவுக் குழுக்களின் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே மனித உரிமைப் பிரச்னையாக  உள்ளது.

அரசியல் நோக்கம் கருதி இந்தக்குழுக்கள் இயங்குகின்றன.குடியியல்,சமூக  செயற்பாட்டாளர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர்  துன்புறுத்தப்படுகின்றனர்.

ஊடகவியலாளர்கள் சுய தணிக்கைக்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது.இங்கு முக்கிய  பிரச்னை காணாமல் போனோர் விவகாரமாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில்  ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.அதற்கு எவ்வித பொறுப்புக்களும்  கூறப்படவில்லை.

இராணுவத்தினர் தடுப்பிலுள்ளோரை சித்ரவதை செய்து துன்புறுத்துகின்றனர். காவல்துறையினரால் பொதுமக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து  வைக்கப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் விசாரணைகளின் போது சிலர்  மரணமாகியுள்ளனர்”என்று கூறப்பட்டுள்ளது.