மஹிந்த ராஜபக்சே உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து!

பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது.

புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது.

அந்தக் கருத்தரங்கில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர்.

அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன.

எனினும் மிக கவனமாக பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார அமைப்பு செவ்வாய்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், மதிய அமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

TAGS: