தமிழீழத்தை உருவாக்கியே தீருவோம்; அடித்துக் கூறுகிறார் சிறிதரன் எம்.பி !

“உலக தமிழர்களுடன் இணைந்து தனித் தமிழீழத்தை விரைவில் உருவாக்குவோம், ஈழமே எங்களின் இறுதி நோக்கம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது;

“நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட அனுஸ்டிக்க சுதந்திரம் இல்லை. தற்போதும் இராணுவத்தினரின் கண்காணிப்பிலேயே யாழ். பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் கொடுப்பதற்காக பள்ளிக்குச் சென்றபோது, அச்சம் ஊட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினர் சுற்றி நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு என்ன நடக்கும்? இதை எப்படி சுதந்திரமான, ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். எனக்கே இந்த நிலைமை என்றால் மக்களுக்க சுதந்திரம் எங்கே சுதந்திரம் இருக்கப் போகிறது.

சிங்களவர்கள் புத்தரின் கொள்கைகளையும் பாராம்பரியங்களையும் தமிழர்களிடம் திணிக்க நினைக்கின்றனர். இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்வதனால் காலப்போக்கில் தமிழர்கள் வெளிநாட்டவர்களாக கருதப்படுவார்கள்.

சிங்களவர்கள் தமிழர்களின் கலாசாரத்தையும் மூலதனத்தையும் அடியோடு இல்லாமல் செய்வதற்கு திட்டமிட்டு இவ்வாறான செயல்கள் செய்யப்படுகின்றது. எனினும் எமது விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: