தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு!

கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற அனைத்துலக ‘வீவா’ கால்பந்தாட்ட போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக அரங்கில் இடம்பெறும் ‘விவா’ உலகச் சுற்றுக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் உலகத் தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில் தமிழீழ அணியும் இப்போட்டில் பங்கு பற்றியிருந்தது.

குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக் கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத்தை சேர்ந்த தமிழ் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர்.

ஐ.நா. நாடுகள் மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையே ‘ஃபீஃபா’ (FIFA) அமைப்பினால் நடத்தப்படும் கால்பந்தாட்ட போட்டியில் பங்குபற்ற முடியாத தேசிய இனங்களுக்கான போட்டியாக ‘விவா’ உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் முதன்முறையாக இம்முறை தமிழீழத்தின் சார்பாக தமிழீழம் உதைபந்தாட்ட அணி கலந்துகொண்டது.

தமிழீழ அணிக்காக கனடாவில் இருந்து சென்ற வீரர்கள் திங்கட்கிழமை மாலை ரொறன்ரோ, பியர்சன் அனைத்துலக விமானநிலையத்தில் வந்திறங்கிய போது கனடிய தமிழர் விளையாட்டுக் கழகத்தினர், பெற்றோர்கள், நண்பர்கள், இளையோர்கள் எனப் பலர் திரண்டு வரவேற்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் இம்முறை தமிழீழம், டார்புர், குருதிஸ்தான், வட சைப்ரஸ், ரேடியா, ஒக்சிரான்ரியா, புரோவென்ஸ், மேற்கு சகாரா, சான்சிபார் ஆகிய தேசிய இனங்களைச் சார்ந்த அணிகள் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் தமிழீழ அணி பங்கு பற்றியமை, தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மற்றொரு ஒரு பதிவாகும்.