பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக் கூடும் என்னும் அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

“வால் ஸ்டீரிட் என்ற நியூயார்க் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். ஆகவே நாம் சூழ்நிலையை மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது,” என அவர் சொன்னார்.

“நாட்டை உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றுவது” என்னும் தலைப்பைக் கொண்ட தேசிய மாநாட்டில் அவர் பேசினார்.

2020 இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளில் மக்களும் அரசாங்கமும் வெற்றி பெற பாதுகாப்பான அந்நியச் சூழ்நிலை தேவை என நிதி அமைச்சருமான நஜிப் கூறினார்.

எல்லா மலேசியர்களுக்கும் நன்மை அடையும் வகையில் பொருளாதார வளர்ச்சியையும் வர்த்தக மேம்பாட்டை நிலை நிறுத்தவும் தாம் அரசாங்க உருமாற்றத் திட்டங்களையும் பொருளாதார உருமாற்றத் திட்டங்களையும் தாம் அறிமுகம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மந்த நிலையிலிருந்து விடுபட பல மேற்கத்திய நாடுகள் போராடிக் கொண்டும் உலக வல்லுநர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மந்தமான’ சூழ்நிலை உருவாகும் என ஆரூடம் கூறிய போதிலும் நமது பொருளாதாரம் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது,” என நஜிப் மேலும் கூறினார்.

பெர்னாமா