நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் விமானிகள்

லண்டன்: ‘பிரிட்டன் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் இரண்டு விமானிகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து, முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு விமானியிடமும் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.

நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.

இவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து, விமான ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், “விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்” என்றனர். விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, பிரிட்டன் விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.