கர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது ரத்துச் செய்யுங்கள்

பத்துமலை ‘கொண்டோ’ (ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி) திட்டம் தொடர்பான சர்ச்சையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தத் திட்டம் தொடர்பில் அவரது பக்காத்தான் சகாக்கள் பிஎன் மீது குற்றம் சாட்டும் வேளையில் கர்பால் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்த உத்தேச 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடித் திட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதின் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் அதனைச் செய்ய முடியும் என அந்த மூத்த அரசியல்வாதி இன்று விடுத்த ஒர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

அந்தத் திட்டம் தொடர்பான குளறுபடிக்கு பக்காத்தான் காரணமா அல்லது பிஎன் காரணமா என்ற “குறை கூறுவதை” நிறுத்துவதற்கும் உலகப் புகழ் பெற்ற முருகப் பெருமான் ஆலயத்துக்கு சேதம் ஏற்படக் கூடிய மருட்டல் மீது இந்துக்களிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்கவும் அது உதவும் என கர்பால் வாதாடினார்.

“அந்தத் திட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்ப்புக்களின் முக்கியத்துவத்தை மாநில அரசாங்கம் புறக்கணிக்க முடியாது,” என அவர் எச்சரித்தார்.