அமெரிக்காவை தாக்கியது ‘சான்டி’ புயல்- இலட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு!

நியூஜெர்சி: அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த சான்டி புயல் இன்று அதிகாலை நியூ ஜெர்சியை தாக்கியது. இப்புயலால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கரீபியன் கடற்பரப்பில் உருவான சான்டி புயல் ஜமைக்கா, கியூபா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பியது. இதனால் கடந்த சில நாட்களாக அங்கு அசாதாரண நிலைமை நிலவிந்தது. இப்புயலால் நியூயார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் அடியோடு முடங்கின. அமெரிக்காவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளன. புயலால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சான்டி புயல் இன்று காலை நியூஜெர்சியை தாக்கியது. இப்புயலால் 13 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. நியூஜெர்சி நகரத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டது. ராட்சத மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பயங்கர ஓசையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.

கோனி தீவு, மன்ஹாட்டன் கடற்கரை, கிழக்கு ஆறு பகுதியில் உள்ள புரூக்ளின் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள 468 சுரங்கப்பாதை போக்குவரத்து மையங்கள், பஸ், ரயில் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டு, மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள நாஸ்டாக் பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா தலைமை அலுவலகமும் 2 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

ஒபாமா மற்றும் மிட்ரோம்னி ஆகியோர் வெர்ஜீனியா பகுதியில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்துள்ளனர். ஓசன் சிட்டி, மேரிலேண்ட், பகுதிகளிலும், கனெக்டிகட் மற்றும் ரோத் தீவுக்கு இடைப்பட்ட பகுதியிலும் 8 அடிக்கு மேல் அலை எழும்பும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சான்டி புயலின் பாதிப்பு ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்பதால், மளிகைப் பொருள்கள் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். உணவுப்பொருள்கள், குடிநீர், ரொட்டி, பால், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.