தேர்தல் ஆணைய(இசி)த்தின் உத்தேச தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கை குறையுடையது என்பதற்கு அந்த ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலிக்கு அனுப்பிய கடிதமே தக்க சான்றாகும் என சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர் சுரைடா கமருடின் கூறினார்.
தேர்தல் தொகுதிச் சீரமைப்பு குறித்து முறையான விளக்கமளிப்பும் கலந்துரையாடலும் தேவை என்று அஸ்மின் விடுத்த கோரிக்கையை இசி நிராகரித்து விட்டது.
அஸ்மினின் கோரிக்கையை நிராகரித்த இசி, எல்லா விளக்கங்களும் அதன் வலைத்தளத்தில் கிடைக்கும் என்று கடிதத்தில் கூறியிருந்தது என்று அம்பாங் எம்பியுமான சுரைடா கூறினார்.
“இசி தன்னை பிஎன் இயந்திரத்தில் ஒரு பகுதியாகவும் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்தும் பொறுப்பு தனக்கு உண்டு என்பதுபோலவும் நினைத்துக் கொள்ளக்கூடாது”, என்றவர் சாடினார்.