‘தொடக்கத்திலிருந்து எம்.பி.என்.னுக்குத் தலைமை தாங்கியதால், முஹைதீன் மீது நம்பிக்கை’

பாகோ எம்பி முஹைதீன் யாசின், தேசிய மீட்சி மன்றத்திற்கு (எம்பிஎன்) தலைவராக நியமிக்கப்பட்டதற்குக் காரணம், ஆரம்பத்தில் இருந்தே அவர் அதற்கு தலைமை பொறுப்பு வகித்ததுதான் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“உண்மையில், இந்தக் கூட்டத்திற்கு முதன்முதலில் பாகோ எம்.பி.தான் தலைமை தாங்கினார், எனவே பாகோ எம்.பி. தனது வேலையைச் சிறப்பாக தொடருவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இன்று நாடாளுமன்றக் கேள்வி பதில் அங்கத்தில் கூறினார்.

முஹைதீன் ஏன் எம்பிஎன் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிய விரும்பிய சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலின் (பி.எச். – கூலிம் பண்டார் பாரு) கூடுதல் கேள்விக்குப் பதிலளித்த போது, இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.

முஹைதீன் செப்டம்பர் 4-ம் தேதி, அமைச்சர் அந்தஸ்துடன் எம்.பி.என். தலைவராக நியமிக்கப்பட்டார்.

முஹைதீனின் 17 மாத நிர்வாகத்தின் போது, எம்.பி.என். அறிமுகப்படுத்தப்பட்டது.

தினசரி கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை, மருத்துவமனை திறன் மற்றும் தடுப்பூசி விகிதங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு இந்தத் திட்டம் நான்கு நிலைகளை அறிமுகப்படுத்தும்.