கேமரன் மலை அணைக்கட்டு திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூவர் பலி

1 damகேமரன் மலை நீர்-மின்சார அணைக்கட்டு திறந்துவிட்டதால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூன்று  வெளிநாட்டவரும் ஒரு மலேசியரும் உயிர் இழந்தனர் எனக் கூறப்படும் வேளையில் இன்னொருவர் என்னவானார் என்பது தெரியவில்லை.

உயிரிழப்புப் பற்றி நேற்றிரவு பின்னேரம் 1.38 அளவில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கேமரன் மலை தீயணைப்பு, மீட்புச் சேவைகள் துறைத் தலைவர் யுஸ்ரி அப்துல்லா கூறினார்.

“28பேர் தேடல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுவரை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று வங்காள தேச ஆடவருடையது, இன்னொன்று இந்தோனேசிய பெண்ணுடையது. ஒரு இந்தோனேசியப் பெண்ணைக் காணவில்லை எனவும் புகார் செய்யப்பட்டுள்ளது”, என்றார்.

நள்ளிரவு வாக்கில் ரிங்லெட்டில், சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டில் நீர் திறந்து விடப்படுவது குறித்து எச்சரிக்கும் சங்கொலி முழங்கியது.

“20 நிமிடங்களில் அணைக்கட்டின் முதலாவது கதவு திறக்கப்பட்டு அணைக்கட்டு நீர் வெளியேற்றப்பட்டது”,என யுஸ்ரி குறிப்பிட்டார்.

1 dam1பெர்தாம் பள்ளத்தாக்கில் சகதி நிரம்பிய வெள்ளநீர் பெருகி நிற்கிறது. அதனால், 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன  என்றவர் கூறினார்.

தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லிஹ் காங், தம் முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்: “இன்று என் பிறந்தாள். ஆனாலும், இது சோக நாள். பெர்தாம் பள்ளத்தாக்கில் மூன்று இறப்புகள், ஒருவரைக் காணவில்லை.

“டிஎன்பி நீர்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளம் இது.

“இறப்பு எண்ணிக்கை கூடும் சாத்தியம் உள்ளது”, என்றாரவர்.