பினாங்கில் குறைந்த-விலை வீடு வாங்குவோருக்கு நற்செய்தி

DAP-Guan Engபினாங்கு மாநில அரசு வீட்டுடமை பங்கிட்டுத் திட்டமொன்றைத் தொடங்கவுள்ளது. இது,  குறைந்த வருமானம் பெறுவோரும் வீட்டுடமையாளர் ஆவதற்கு உதவும்.

கட்டுப்படியான விலையில் வீடு வாங்க விரும்பும் பலருக்கு வங்கிகளிடமிருந்து 90விழுக்காடு 100 விழுக்காடு கடன்பெற முடிவதில்லை என்பதால் அரசு இத்திட்டத்தைக் கொண்டுவருவதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

மாநில அரசு செப்ராங் பிறை செலாத்தானில், தாமான் சுங்கை பெர்மாயில் 104 குறைந்த விலை வீடுகளை வாங்கும் என லிம் கூறினார். அவை தகுதியுள்ளவர்களுக்கு விற்கப்படும்.

“அவ்வீடுகளின் விலை ரிம38,000. வீடு வாங்க தகுதிபெறுவோர் 70 விழுக்காடு வங்கிக் கடன் பெற்றால் போதும். மீதமுள்ள 30 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும். அதை வட்டியில்லாமல் அவர்கள் திருப்பிக் கொடுக்கலாம்”, என்று லிம் கூறினார்.