அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி செய்கிறது, வேறு யாருக்கெல்லாம்?

logo perkasa 2உங்கள் கருத்து  ‘அம்னோவுக்கு வெளியில் இருந்துகொண்டு அம்னோவின் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்புத்தான் பெர்காசா என்பது உலகம் அறிந்த இரகசியம். அது உண்மை என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.’

பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது

அமைதி ஏற்பாட்டாளர்: அப்படியானால், பெர்காசாவின் கோணங்கித்தனங்களை உள்துறை அமைச்சு எக்காலத்திலும் எதிர்க்காது. இந்த லட்சணத்தில் பிரதமர் அமைதி பற்றியும் இணக்கம் பற்றியும் ஒன்றிணைவது பற்றியும் பேசுகிறார். சிரிப்புத்தான் வருகிறது.

பல்லின ஆதரவாளன்: பிஎன் வெற்றிக்காக அம்னோவின் பணம் கொடுக்கப்பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இது அரசாங்கப் பணம் அல்லவா?

கவலைகொண்டவன்: இப்ராகிம் அலி வேட்பாளர் நியமன மையத்துக்குள் (எதிரிகளை வென்றுவிட்டு ரோமுக்குத் திரும்பும் சீசரைப் போல் வீறுநடை போட்டுச்) சென்றதையும் அதற்குமுன் பிஎன் வேட்பாளர்  அவருக்கு இடமளித்துவிட்டு பெருமனத்துடன் ஒதுங்கிக் கொண்டதையும் (என்ன ஒரு நாடகம்) மறக்க முடியாது.

இன/சமய விவகாரங்களில் கடினப்போக்குக் கொண்ட இவரைப் புறக்கணித்தார்களே அந்த பாசிர் மாஸ் மலாய்ப் பெரும்பான்மை வாக்காளர்கள், அவர்களுக்கு இவ்வேளை நன்றி தெரிவிப்போம்.

ஜெரார்ட் லூர்துசாமி: அம்னோ, பெர்காசாவுக்கு ஏன் தாலிபான்களுக்குக் கூட உதவி செய்யட்டும், அது அவர்களின் விருப்பம். ஆனால்,  உதவிசெய்ய அரசாங்க நிதியைப் பயன்படுத்தக்கூடாது.

ஸ்வைபெண்டர்: அம்னோவுக்கு வெளியில் இருந்துகொண்டு அம்னோவின் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்புத்தான் பெர்காசா என்பது உலகம் அறிந்த இரகசியம். அது உண்மை என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆஹா: சிலாங்கூர் பெர்காசா தலைவர் கூறியிருப்பது சரிதான்.  பெல்டா தலைவர் இசா சமட்  வாயைத் திறந்திருக்கக்கூடாதுதான்.  ஆமாம், மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதே மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் என்ன செய்யப் போகிறது?

பார்வையாளன்: அதுதான் நாட்டை நிர்வகிக்க பணமில்லாமல் கஜானா காலியாகி விட்டது. வரிப்பணமெல்லாம் தீவிரவாத, அமைப்புக்களுக்கும் வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கும் தலைவர்களின் டாம்பீகமான வாழ்க்கை முறைக்கும் அல்லவா அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டோமி: இவ்விவகாரத்தில் ‘தைக்கோ’, விளக்கம் சொல்லப்போவதில்லை, சில நாளில்  மறக்கப்படும் என்று எண்ணி எப்போதும்போல் மவுன விரதம் காப்பார்.