லியோ ஒப்பந்தத்தை மீறினார், நம்பத் தகாதவர்: சொய் லெக் சாடல்

chuaலியோ  தியோங்  லாய்  மசீச  தலைமைப்பொறுப்பை  ஏற்று  ஒரு மாதம்கூட  ஆகவில்லை, அதற்குள்  அவர்மீது   குற்றம் சாட்டத் தொடங்கி  விட்டார்  முன்னாள்  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக். தங்களுக்கிடையில்  செய்துகொள்ளப்பட்ட  ஒப்பந்தத்தை  லியோ  மதிக்கத்  தவறிவிட்டார்  என்று  பொறுமினார்  அவர்.

பெட்டாலிங்  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  இரண்டு ஒப்பந்த பத்திரங்களைக்  காண்பித்த  சுவா,  அவற்றை  லியோ  மதிக்கவில்லை  என்றார்.

2010-இல், தாம்  மசீச  தலைவர் பதவிக்கும்,   அவர் துணைத்  தலைவர்  பதவிக்கும்  போட்டியிடுவது  என்ற  ஏற்பாட்டுக்கு  ஒப்புக்கொண்ட  லியோ,  பின்னர்  ஒங் கா  திங்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிடுவதற்கு  ஆதரவு   காட்டினாராம்.

பின்னர்,  2013 கட்சித்  தேர்தலில்,  சுவா, போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்வது, பதிலுக்கு  லியோ சுவாவின் ஆள்களைத்  தலைமைச்  செயலாளராகவும், மூன்று  மாநிலங்களில்  மசீச  தலைவர்களாகவும்,  மூவரை  மத்திய  செயலவையிலும்,  சுவாவை  ஒரு  ஜிஎல்சி  வாரிய  உறுப்பினராகவும்   நியமிப்பது  என இருவருக்குமிடையில்  ஓர்  ஏற்பாடு  செய்துகொள்ளப்பட்டதாம்.

லியோ  செய்வதாகச்  சொன்னதில் “99 விழுக்காடு” நிறைவேற்றவில்லை  என  சுவா  சாடினார்.

“இரண்டு  ஒப்பந்தங்களை மீறியதால்,  வெளிப்படையாகக்  கூறுகிறேன்,  அவர்  நம்பத்  தகாதவர்”, என்று  சுவா  கூறினார்.