ஆஸ்திரேலியா: மிதந்தது மூழ்கி இருக்கலாம்

1 objectஇந்திய  பெருங்கடலின்  தென்பகுதியில்  காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-ஐத்  தேடிக்  கொண்டிருக்கும் பன்னாட்டுக்  குழுவினர்  இதுவரை  எதையும்  காணவில்லை.

பன்னாட்டுக்  கப்பல்களும்   விமானங்களும்   இந்தியாவுக்கும்  தாய்லாந்துக்குமிடையில்  அந்தமான்  கடலில்  ஏற்கனவே  தேடிய  பகுதியில்  மீண்டும் தேடும்  படலத்தை  முடுக்கி  விட்டுள்ளன.

இரண்டு  வாரங்களுக்குமுன் 239 பேருடன்  காணாமல்போன  எம்ஏஎஸ்-ஸின்  போயிங்  777  விமானம்  என்னவாயிற்று  என்பது  இதுவரை  புரியாத  மர்மமாகவே  உள்ளது. அதன்  உடைந்த  பகுதிகள்கூட  எங்கும்  காணப்படவில்லை. ஆனால், இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில்  மிதந்து  கொண்டிருந்த  இரண்டு  பொருள்கள்  விமானத்தின்  பாகங்களாக  இருக்கலாம்  என்று  கருதப்பட்டு நேற்று  அப்பகுதியில்  மிகப்  பெரிய  தேடும்  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐந்து  நாள்களுக்குமுன்  செயற்கைக்கோள்  படங்களில்  காணப்பட்ட  அப்பொருள்களை  ஆஸ்திரேலிய  விமானங்கள்   எவ்வளவு  தேடியும்  கண்டுபிடிக்க  முடியவில்லை.

“முன்பு  மிதந்து  கொண்டிருந்தது  இப்போது  மிதக்கவில்லை”, என  பெர்தில்  ஆஸ்திரேலிய  துணைப்  பிரதமர்  வாரன்  ட்ரஸ்  செய்தியாளர்களிடம்   தெரிவித்தார். “ஒருவேளை  கடலுக்குள்  மூழ்கி  இருக்கலாம்”,  என்றாரவர்.

ஆனாலும்,  தேடும்  படலம்  தொடர்கிறது. அங்குள்ள  ஆஸ்திரேலிய,  நியூ  சிலாந்து,  அமெரிக்கக்  கப்பல்களுடன்  சீன,  ஜப்பான்  நாட்டுக்  கப்பல்களும்  வார  இறுதியில்  சேர்ந்து  கொள்ளும்.