பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததற்கு காரணம் கூறுகிறார் அஸ்மின்

 

PKR -Azmin Aliபிகேஆரின் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மையோ, தலைவர் டாக்டர் வான் அசிஸாவையோ எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வலுவான காரணம் இல்லை என்று கூறுகிறார்.

இச்சவால் மிக்க காலக்கட்டத்தில், அன்வாரும் வான் அசிஸாவும் கட்சியை வழிநடத்துவதற்கு போதுமான திறமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்றாரவர்.

“அன்வார் கட்சி மேற்கொண்டுள்ள போராட்டத்தின் சின்னம். நம்மை வழிநடத்த அவர் இன்னும் தேவைப்படுகிறார்”, என்று நேற்று பினாங்கில் செய்தியாளர்களிடம் அஸ்மின் கூறினார்.

“(குதப்புணர்ச்சி வழக்கு தீர்ப்பு காரணமாக) அன்வார் அரசியலில் ஈடுபடுவது தடுக்கப்படுமானால், கட்சியின் போராட்டத்தைத் தொடர்வதற்கும் கட்சியை வழிநடத்துவதற்கும் தேவையான திறமையை வான் அசிஸா பெற்றிருக்கிறார்”, என்று அவர் மேலும் கூறினார்.

அஸ்மினின் இக்கருத்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும், ஏனென்றால் அவர் அசிஸாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டதில்லை. அசிஸா சிலாங்கூர் மந்திரி புசார் காலிட்டுக்கு நெருக்கமானவர்.

பிகேஆரின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஸ்மின் அலி மும்முனைப் போட்டியைச் சந்திக்கிறார். சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் மற்றும் உலுசிலாங்கூர் கிளைத் தலைவர் கே. இராம சந்தரம் ஆகியோரும் அப்பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

அம்னோவுக்கு தாவ மாட்டேன்

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் தோல்வியுற்றால் அம்னோவுக்கு திரும்பிச் செல்வீரா என்று வினவப்பட்ட போது தமது கடந்த கால வரலாறு அதற்கு பதில் அளிக்கும் என்றாரவர்.

“கட்சி தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், நான் தொடர்ந்து பிகேஆருக்கு சேவையாற்றுவேன்”, என்று அஸ்மின் உறுதி கூறினார்.

 

 

 

 

 

 

TAGS: