தாம் சொன்னதை பிரதமர் திரித்துக் கூறினார் என அன்வார் ஆத்திரம்

anwaபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சீன  நாளடான  சதர்ன்  வீக்லி- இடம்  தாம்  கூறிய  ஒரு  கருத்தைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் தம்  வசதிக்கு  ஏற்ப “திரித்துக்  கூறிவிட்டார்”  எனச்  சாடியுள்ளார்.

நேற்று  நிதி  அமைச்சின்  கூட்டத்தில்  பேசிய  நஜிப், “தாம்  மட்டும்  பிரதமராக  இருந்தால்  ஒரு  நொடியில்” மலேசிய விமான  நிறுவனத்தின்  எம்எச்370  மர்மத்தை  தீர்க்க  முடியும்  என்று  அன்வார்  கூறியதாகக்  குறிப்பிட்டு  அதற்காக  அவரைச்  சாடி  இருந்தார்.

ஆனால், தாம்  அப்படிச்  சொல்லவில்லை  என்ற  அன்வார்,  தாம் சொன்னது  தவறாக  மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது  என்று கூறினார்.

“ஒரு  வினாடியில்  உடனடி  நடவடிக்கை  மேற்கொண்டு  தகவல்  தொடர்ந்து  கிடைப்பதை  உறுதி  செய்திருப்பேன்”  என்று  மட்டுமே  தாம் சொன்னதாகக்  கூறினார்  அன்வார்.

தாம்  சொல்லாத  ஒன்றைச்  சொன்னதாகக்  கூறி  தம்மைச்  சாடி  இருக்கிறார்கள்  என்று  அவர்  இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.