பிஎம்ஓ அறிக்கை சீரற்ற அரசாங்கம் என்பதைக் காட்டுகிறது

sedதேச நிந்தனைச்  சட்டம்  அரசியல்வாதிகளை  அடக்கிவைக்கப்  பயன்படுத்தப்படுவதாகக்  கூறப்படுவதை  மறுத்து  பிரதமர்  அலுவலகம் (பிஎம்ஓ) நேற்று  விடுத்திருந்த  அறிக்கை, நடப்பு அரசாங்கமே “மலேசிய  வரலாற்றில்  மிகவும்  சீரற்ற  அரசாங்கம்’  என்பதைக்  காண்பிக்கிறது   என  மூத்த நாடாளுமன்ற  உறுப்பினர்  லிம்  கிட்  சியாங்  சாடியுள்ளார்.

அந்த  அறிக்கையில்  யாருடைய  கையொப்பமும்  இல்லை  என்பதே  பிரதமர்  நஜிப்பின்  நிர்வாக  இலட்சணத்துக்கு  நல்ல  எடுத்துக்காட்டு. “அங்கே  வலது கை  செய்வது  இடது கைக்குத்  தெரியாது”, என்றவர்  கூறினார்.

பிஎம்ஓ  அறிக்கை,  தேச நிந்தனைக்  குற்றச்சாட்டு  நீதிமன்றம்  சம்பந்தப்பட்ட  விவகாரம்  என்று கூறியிருந்தது. இது “அதிகாரத்தில்  உள்ளவர்களுக்கு   அவர்கள் என்ன  செய்கிறார்கள்  என்பதே  தெரியவில்லை”  என்பதைத்தான்  காட்டுகிறது என்றாரவர்.

“எந்த  நம்பகமான  பிரதமரும்   ஒருபுறம்  ‘மலேசியாவை  உலகின்  மிகச்  சிறந்த ஜனநாயக  நாடாக’ உருவாக்கப்  போகிறேன்  என்று  வாக்கு  கொடுத்துவிட்டு  மறுபுறம் எதிரணித்  தலைவர்களுக்கு  எதிராக   சட்ட  நடவடிக்கை  எடுக்க  சட்டத்துறைத்  தலைவருக்கு  அனுமதி  அளிக்க  மாட்டார். மிக மோசமான  ஜனநாயகத்தில்தான்  அப்படி  நடக்கும்”, என லிம்  கூறினார்.