மலேசியாகினி செய்தியாளர் சூசன் போலீசாரால் இன்று விசாரிக்கப்படுகிறார்

 

Susanபினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் பற்றி விசாரணை நடத்துவதற்காக மலேசியாகினியின் செய்தியாளர்/துணை ஆசிரியர் சூசன் லூன் நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இன்று நண்பகலில் வருமாறு கூறப்பட்டுள்ளார்.

சூசனும் ஓன்லைன் செய்தி தளமும் தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன் 41c இன் கீழ் விசாரிக்கப்படவிருக்கின்றனர். போலீஸ் தடுப்புக்காவலில் இருந்த போது பீ பூனுடன் மாநில தன்னார்வ காவல்படையில் (பிபிஎஸ்) அவரது பங்கு பற்றி சூசன் நடத்திய நேர்காணலை வெளியிட்டது நிந்தனையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இன்று நண்பகலில் விசாரணைக்காக ஜாலான் பட்டாணி போலீஸ் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என்று நேற்றிரவு மணி 11. 30 அளவில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக சூசன் கூறினார்.

தாமும் இன்று விசாரிக்கப்படவிருப்பதாக பீ பூன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பெர்காசா மற்றும் 13 இதர அரசு சார்பற்ற அமைப்புகள் செய்திருந்த 10 புகார்கள் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை தொடங்குகின்றனர்.