எம்பி வேட்பாளர் தேர்வு பேட்டிக்கு வான் அஸிசா அழைக்கப்படவில்லை

 

sulசிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக சிலாங்கூர் அரண்மனை மூவரை பேட்டி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மூவரில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடம்பெறவில்லை.

பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இஸ்கந்தர் சாமாட் மற்றும் டாக்டர் அஹமட் யுனுஸ் ஹைரி மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகிய மூவரும் அந்த “பேட்டியில்” பங்கேற்றவர்கள் என்று த ஸ்டார் ஓன்லைன் அதன் இன்றையச் செய்தியில் கூறுகிறது.

இந்த பேட்டிகள் தனித்தனியாக கடந்த ஒரு வார காலத்தில் நடத்தப்பட்டதாக பெயர் குறிப்பிடப்படாத வட்டாரத்தை மேற்கோள் காட்டி அச்செய்தி கூறுகிறது.

எம்பி தேர்வுக்கான பேட்டியை நடத்திய குழுவின் உறுப்பினர்களாக மாநிலச் செயலாளர் முகம்மட் கூஸ்ரின் முனாவி, மாநில சட்ட ஆலோசகர் நிக் சுஹைமி நிக் சுலைமான் மற்றும் அரச மன்றத்தின் இரு உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த விவகாரத்தை கடந்த வியாழக்கிழமை அஸ்மின் அலி பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரிடம் தெரிவித்த போது அன்வார் அச்செய்தியை ஏற்றுக்கொண்டார் என்றும் அந்த ஸ்டார் செய்தி மேலும் கூறிற்று.