மலேசியாகினி: நீதிமன்றத்தில் இரு முறை வென்றும், அச்சிட்டு வெளியிட அனுமதி இல்லை

 

Mkini denied permit again1சுயேட்சை செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை அச்சிட்டு வெளியிட உரிமை உண்டு என்று நீதிமன்றம் இருமுறை தீர்ப்பளித்திருந்தும் அரசாங்கம் மலேசியாகினி செய்திருந்த மனுவை நிராகரித்திருக்கிறது.

உள்துறை அமைச்சிடமிருந்து மலேசியாகினியின் தலைமை செயல்முறை அதிகாரி பிரமேஷ் சந்திரன் பெற்றுள்ள கடித்தில் மலேசியாகினியின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அந்த செய்தி இணையதளம் மக்களுக்கு “பெரும் வேதனையளிக்கும்” செய்திகளை வெளியிடுவதின் வழி “மீண்டும் மீண்டும் சர்ச்சையை உண்டாக்குகிறது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சின் வெளியீடுகளின் கட்டுப்பாடு மற்றும் அல்குர்ஆன் வாசகப் பிரிவின் தலைவர் ஹசிமா நிக் ஜாப்பார் மலேசியாகினியின் செய்திகள் “தேசியத் தலைவர்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தக்கூடும்” என்று கூறியுள்ளார்.

“மலேசியாகினியின் ஓன்லைன் செய்தி இணையதளம் வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது என்பதோடு அவை பாரபட்சமற்றதாக இல்லை என்ற அடிப்படையில் அச்சடித்து வெளியிடுவதற்கான அனுமதி கோரும் மனுவை நிராகரிக்க அமைச்சு முடிவெடுத்தது…

அவ்வாறான செய்திகள், அச்சடித்து வெளியிடப்பட்டால், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தும். செய்திகள், விளக்க உரைகள், கருத்துகள், வாசகர்களின் விமர்சனங்கள் என்ற வடிவங்களில் உணர்ச்சிவசப்படக்கூடிய பிரச்சனைகள் கூட வெளியிடப்படுகின்றன”, என்று ஹசிமா கூறுகிறார்.

செய்யப்பட்டுள்ள மனுவில் ஓன்லைன் வடிவத்தின் ஆசிரியர்தான் அச்சடிக்கப்படும் வடிவத்திற்கும் ஆசிரியர் என்று கூறப்பட்டுள்ளது இரண்டிலும் செய்திகள் “நிச்சயமாக” ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும் என்பதைக் காட்டுகிறது என்றும் ஹசிமா கூறுகிறார்.

ஐந்து “சர்ச்சைக்குரிய” கட்டுரைகள்

உள்துறை அமைச்சின் கூற்றுப்படி, மலேசியாகினி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய அறிக்கைகளில் ஐந்து மாதங்களுக்கு முன்பு திரங்கானு மாநில மந்திரி புசார் நெருக்கடி பற்றிய வாசகர்களின் விமர்சனங்களும் அடங்கும்.

அந்த விமர்சனத்தில், “திரங்கானுவை தக்கவைத்துக்கொள்ள நஜிப் எவ்வளவு செலவிடுவார்?” என்பதும் ஒன்று. இது மே 14, 2014 இல் வெளியிடப்பட்டது. இதில் இதற்கு முன்பு நடைபெறாத ஒரு நடவடிக்கையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்டார்: இணையதளத்திற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாற்றங்களுக்கான அரசியல் ஆய்வுகள் (கேபிஆர்யு) என்ற சிந்தனை குழாமின் மலேசியாகினிக்கு எதிராக நஜிப் தொடர்ந்துள்ள வழக்கு குறித்த விமர்சனமும் பிரச்சனையானது என்று அமைச்சு கருதுகிறது.

அமைச்சு சர்ச்சைக்குரியது என்று கருதும் இன்னொரு கட்டுரை அரசாங்கத்தின் தனிப்பட்ட ஜெட் விமானம் பற்றியதாகும். இவ்வாண்டு ஆகஸ்ட்டில் இந்த விமானத்தில் நஜிப்பும் அவரது துணைவியாரும் இருந்தனர் என்று நம்பப்பட்டதோடு அவர்கள் பல ஐரோப்பிய நகர்களில் காணப்பட்டனர் என்ற செய்தியாகும்.

அமைச்சு விரும்பாத இன்னொரு கட்டுரை சமயங்களுக்கிடையிலான குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் “நடுநிலை வழி” ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்தை மலேசிய இந்திய முன்னேற்ற மன்றம் (மிபாஸ்) கடுமையாகச் சாட்டியிருந்ததை மேற்கோள் காட்டி எழுதப்பட்டதாகும்.

அமைச்சு விரும்பாத ஐந்தாவது கட்டுரை பினாங்கு தன்னார்வல பாதுகாப்பு படையினர் விவகாரத்தில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ கைது செய்யப்பட்டது பற்றியதாகும். அக்கட்டுரையை எழுதிய செய்தியாளர் சூசன் லூன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேற்கூறப்பட்ட ஐந்து கட்டுரைகளும், யுவர்சே (Yoursay) பகுதி தவிர்த்து, மலேசியாகினியின் பகசா மலேசியா பகுதியில் வெளியிடப்பட்டன.

மீண்டும் தொடக்க நிலைக்கே

அக்டோபர் 1, 2012 இல், மலேசியாகினியின் வெளியீட்டாளர் எம்கினி டோட்கோம் செய்திருந்த வெளியீட்டு அனுமதிக்கான மனுவை Mkini denied permit again2உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த முடிவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உல்துறை அமைச்சின் முடிவு “பகுத்தறிவுக்குப்புறம்பானது மற்றும் தவறானது” என்று கூறிய நீதிபதி அபாங் இஸ்கந்தர் அபாங் ஹசிம், அம்முடிவு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சு சுதந்தரத்தை, அதில் அச்சடித்து வெளியிடுவதற்கான உரிமையும் அடங்கும், மீறியதாகும் என்று தீர்ப்பளித்தார்.

மலேசியாகினி மீண்டும் ஒரு மனுவை உள்துறை அமைச்சின் முடிவிற்காக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதற்கு எதிராக அமைச்சு மேல்முறையீடு செய்தது.

அக்டோபர் 30, 2013 இல், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அரசாங்கத்தின் மேல்முறையீட்டை நிராகரித்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தியது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் பெடரல் உச்சச்நீதிமன்றத்திற்கு செல்லாததால், மலேசியாகினி புதிய மனுவை உள்துறையிடம் தாக்கல் செய்தது.

இந்த மிக அண்மைய தோல்வியால் துவண்டுவிடாத மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான், மலேசியாகினி மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லும் என்றார்.

“நாம் மீண்டும் தொடக்க நிலைக்கே வந்துள்ளோம். உள்துறை அமைச்சர் எடுத்துள்ள இந்த அறிவுக்குறைவான முடிவை மலேசியாகினி எதிர்க்கும். இம்முறை நீதிமன்றம் மலேசியாகினிக்கு வெளியீடு உரிமத்தை வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிடும் என்று நம்புகிறோம்”, என்று ஸ்டீவன் மேலும் கூறினார்.