அது இஸ்லாத்தைத் தற்காப்பதாகும் என ஏஜி சொன்னதை அமைச்சரவை ஆதரிக்கிறதா?

nancyபெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படாததற்கு  பிரதமர்துறை அமைச்சர்  நன்சி  ஷுக்ரி நாடாளுமன்றத்தில்  அளித்த  பதில்  தொடர்பில்  அதன்  நிலைப்பாடு  என்னவென்பதை  அமைச்சரவை  முடிவு  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை…..காரணம்இஸ்லாத்தின்  புனிதத்தைக்  காக்கும்  நோக்கில்தான்  மலாய்மொழி  பைபிள்களைக்  கொளுத்தப்போவதாக   அவர் மிரட்டல்  விடுத்திருந்தார்”,  என  நன்சி  நாடாளுமன்றத்தில்  குறிப்பிட்டார்  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

அவரது  விளக்கத்துக்குக்  கடும்  எதிர்ப்புத்  தெரிவிக்கப்பட்டதை  அடுத்து  “தாம்  இப்ராகிம்  அலியையோ  அவரின்  சமய  நம்பிக்கைகளையோ  ஆதரிக்கவில்லை”  என்றும்  சட்டத்துறைத்  தலைவர்(ஏஜி) முடிவைத்தான்  “எடுத்துரைத்ததாகவும்”  நன்சி  விளக்கமளித்தார்.

ஏஜியும்  போலீசுக்கும்  எடுக்கும்  முடிவுகளுக்கு  அரசாங்கம்தான்  பொறுப்பு  என்பதை  லிம்  சுட்டிக்காட்டினார்.

அப்படியானால், இப்ராகிமுக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுப்பதில்லை  என்ற  ஏஜி-இன்  முடிவை  அமைச்சரவை  ஒப்புக்கொள்கிறதா, மறுக்கிறதா?  இதற்குப்  பதில்  தெரிய வேண்டும்  என்றவர்  வலியுறுத்தினார்.