அன்வார்: மகாதிருடன் சமரசம் செய்துகொள்வதற்கில்லை

iviewஎதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதிரை   மன்னிக்கத்  தயார்.  ஆனால், அவர்  இழைத்த  தீமைகளை  மறப்பதற்குத்  தயாராக  இல்லை; அவற்றை  மறந்து  அவருடன்  கைகுலுக்கி  சமரசம்  செய்துகொள்ளத்  தயாராக  இல்லை.

“மகாதிர்  பணி ஓய்வு பெற்ற  பின்னர்(2003-இல்)  அவரைப்  பற்றி என்றும்  நான்  கடுமையாக  பேசியதில்லை. அவரை மன்னித்து  விட்டேன். ஆனால்,  அவர்தான் (அதே  குற்றச்சாட்டுகளை) திரும்பத்  திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்”, என மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  அன்வார் வருத்தப்பட்டுக்  கொண்டார்.

மகாதிர், 16  ஆண்டுகளுக்குமுன்,  அன்வாரைத்  துணைப்  பிரதமர் பதவியிலிருந்து  தூக்கியதுடன் அவர்மீது  குதப்புணர்ச்சிக்  குற்றம்  சுமத்தி  சிறைக்குள்  தள்ளினார்  என்பது  குறிப்பிடத்தக்கது. 2004-இல்தான்  அன்வார்  விடுதலை  ஆகி வெளியில்  வந்தார்.

இப்போது  அவர்மீது  2வது குதப்புணர்ச்சி வழக்கு தொடுக்கப்பட்டு  அதன்மீது  அவர்  செய்த  மேல்முறையீடு நாட்டின் உச்ச  நீதிமன்றமான கூட்டரசு  நீதிமன்றத்தில்  உள்ளது.  செவ்வாய்க்கிழமை  அதன்மீது தீர்ப்பளிக்கப்படும்.

மகாதிர்  இப்போது  பணி  ஓய்வு பெற்றுவிட்டாலும் அன்வாரையும்  எதிரணியையும்  இடித்துரைக்கத்  தவறுவதே  இல்லை.

என்றாலும், 89-வயது  நிரம்பிய மகாதிர்மீது  தமக்கு  எந்த  மனக்கசப்பும்  இல்லை  என்கிறார்  அன்வார். பல நேரங்களில்  மகாதிர்  பொறுமையுடனும்  சகிப்புத்தன்மையுடனும்  நடந்து  கொண்டதை  அவர்  மறக்கவில்லை.

ஆனால், பிரதமராக இருந்தபோது  நாட்டுக்கு  இழைத்த  தீமைகளைதான் “ஏற்றுக்கொள்வதற்கில்லை”, என்றார்.

“மகாதிரைக்  குறை  சொல்வது  மகிழ்ச்சி  தந்தாலும்,  அது  என்  நோக்கம்  அல்ல. சில  விசயங்களில்  அவருக்குத்  தொடர்பே  இல்லாதிருக்கலாம்.

“ஆனால்,  நிர்வாகத்தில் சரிவு  ஏற்படக்  காரணமாக இருந்தவர்  அவர்தான்……மகாதிர்  நீதித்துறையிலும்  ஊடகத்துறையிலும்  இருந்த  சுதந்திரத்தை  அழித்து  மக்களுக்குப்  பெருந்  துன்பத்தை  ஏற்படுத்தினார்”, என  அன்வார்  கூறினார்.

ஏன் மகாதிர்  செய்த  தீமைகளைத்  தொடர்ந்து அம்பலப்படுத்தவில்லை  என்ற  வினாவுக்கு, போதுமான  அளவு விளக்கி  விட்டதாகவும்   அதைக்  கொண்டே  மக்கள்  அவரை  மதிப்பிட்டு  விடலாம்  என்றும்  சொன்னார்.

தாம்  இதுவரை  வெளிப்படுத்தியிருப்பவை   மலேசியர்  பலரையும்  சென்றடைய  வேண்டும்.  அப்போதுதான்  அம்னோவையும்  ஆளும்  அரசாங்கத்தையும்  ஒழிக்க  முடியும்  என்றாரவர்.

“இது  மகாதிர்  மட்டுமல்ல  மொத்த  கட்டமைப்பும், கட்சி (அம்னோ) மொத்தமும்  சம்பந்தப்பட்டது. சில  நேரங்களில்  இளைஞர்கள்  சிலரது  சிந்தனையும்  மதவெறியும்  இன்னும் மோசமாக  உள்ளது”, என  அன்வார்  சொன்னார்.