எம்ஏஎஸ்-ஸுக்கு ஏற்பட்ட நிலை FGV-க்கும் நேரலாம்

fgvஅரசாங்கம்,  கடந்த  ஈராண்டுகளாக  பெல்டா குளோபல்  வெண்ட்சர்ஸ் (FGV)ஹோல்டிங்ஸ்  நிறுவனம்  கண்டுவரும்  மோசமான அடைவுநிலையைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால் புரோட்டோன்,  மலேசிய   விமான  நிறுவனம்  போன்றவை  சென்ற  வழியே  அதுவும்  செல்லக்கூடும்  என  எம்பி  ஒருவர்  எச்சரித்துள்ளார்.

2012-இலிருந்து இவ்வாண்டு  அக்டோபர்  முடிய  அந்நிறுவனத்தின்  பங்கு  விலைகள்  36.77 விழுக்காடு  வீழ்ச்சி  கண்டிருப்பதாக  டிஏபி   பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

இவ்வீழ்ச்சியினால்  அதில்  பங்குதாரர்களாகவுள்ள  அரசாங்க  நிறுவனங்களான  ஊழியர்  சேமநிதி (இபிஎப்), தாபோங்  ஹாஜி,  பணிஓய்வு  நிதி நிறுவனம் (KWAP) ஆகியவற்றுக்கு கிட்டத்தட்ட ரிம1 பில்லியன்  இழப்பு  ஏற்பட்டிருக்கலாம்  என்றாரவர்.

“FGV-இன்  உயர் நிர்வாகத்துக்குப்  போதுமான  கால  அவகாசம்  கொடுத்தாயிற்று. இந்த  மோசமான  அடைவுநிலைக்கு  அவர்கள்தான்  கூட்டுப்  பொறுப்பேற்க  வேண்டும்.

“FGV புரோட்டோன்  அல்லது  எம்ஏஎஸ்ஸைப்  போல்  முழுக்க முழுக்க  அரசாங்கத்தையே  நம்பியிருக்கும்  நிலை  வருவதற்குமுன்  அரசாங்கம்  தகுந்த  நடவடிக்கை  எடுத்துக்கொள்ள  வேண்டும்”, என  டோனி  கேட்டுக்கொண்டார்.