அமைதியான பேரணிமீது நடவடிக்கை எடுப்பதா? போலீசைச் சாடியது பிகேஆர்

copsநேற்று   கோலாலும்பூரில்  நடந்த  மாபெரும்  கித்தா  லவான்   பேரணி  உள்பட,  பேரணிகள்  அமைதியாகவே  நடந்துவந்துள்ள வேளையில் பேரணித்  தலைவர்கள்மீது  போலீஸ்  விசாரணை  நடத்துவது  அதிகாரமீறலாகும்  என  பிகேஆர்  சாடியுள்ளது.

நேற்று, 10,000  பேர்  கலந்துகொண்ட  பேரணி  எவ்வித  அசம்பாவிதமுமின்றிக்  கலைந்து  சென்ற  பின்னர்  போலீசார்  இரவு  மணி  7.45க்கு  கிளானா  ஜெயா  பிகேஆர்  தொகுதித் தலைவர்  சைபுல்லா  சுல்கிப்ளியைக்  கைது  செய்தனர்.

நேற்றைய  பேரணியும்  அதற்குமுன்  நடந்த  பேரணிகளும்  வன்முறை  ஏதுமின்றி  அமைதியாகவே  நடந்து  முடிந்துள்ளன  என்பதால்  போலீசார்  சைபுல்லாமீதோ  மற்ற  பிகேஆர்  தலைவர்கள்மீதோ  நடவடிக்கை  எடுக்கக்  காரணம்  ஏதுமில்லை  என  பிகேஆர்  பாடாங்  செராய்  எம்பி  என். சுரேந்திரன்  கூறினார்.

“அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்கீழ்  அமைதியாக  நடந்துள்ள  பேரணியில்  கலந்துகொண்டவர்கள்மீது  போலீஸ்  நடவடிக்கை  எடுக்க  முடியாது.

“ஆனால், போலீசார்  சட்டத்தைத் திரித்து  குற்றவியல்  சட்டத்தின்  பொருத்தமற்ற  விதிகளைப்  பயன்படுத்தி  கைது  செய்யவும்  விசாரணை  செய்யவும்  முனைகின்றனர்”, என்றாரவர்.