வான் அஸிஸாவின் வெற்றி பல்லின மக்களின் வெற்றி!-

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 4, 2015

 

azizahஅடுத்த மூன்று நாட்களில் பகாங் ரொம்பின்  மற்றும் பினாங்கு பெர்மாத்தாங் பாவ் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களை மலேசிய மக்கள் எதிர்க்கொண்ட பொழுதும், பினாங்கு பெர்மாத்தாங் பாவ்தொகுதி இடைத்தேர்தல் நாட்டு மக்களின் கவனத்தை மட்டுமின்றி உலக அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களின்   கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில்  கெஅடிலான் வேட்பாளரான டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயில் தேசிய முன்னணியின் வேட்பாளரான  சுஹாய்மி சாபுடினை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

 

இது, இடைக்கால அரசியல் மறுஆய்வு என்பது மட்டுமின்றி நாட்டில் ஒரு மாபெரும்  அரசியல் மாற்றத்திற்கான முன்னோடியாகக்கூட  அமைவதை உறுதிப்படுத்தக் கூடியது. இந்த நாட்டின் தலைவிதியையே மறுநிர்ணயம் செய்ய வேண்டுமா என்பதற்கு இங்கு விடை கிடைக்கும்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில்  நடந்து வரும் நிகழ்ச்சிகள்  அனைத்தும் பிரதமர் மற்றும் பாரிசான் வழங்கிய வாக்குறுதிகளுக்கு  எதிர்மறையாக நடந்து கொண்டிருப்பதை மக்கள்  உணரத்தொடங்கி விட்டனர்.

 

நம்பிக்கை என்றவர் நாட்டு நிதியில் 1எம்.டி.பியின் 4200 கோடி வெள்ளிகளுக்குச் சரியான கணக்குக்காட்ட முடியாமலிருக்கிறார். உயர்ந்த இலட்சியம் என்றவர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை சிறையில் அடைத்தும், எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்தும், அவர்களைப் போலீஸ் நிலையத்துக்கும், நீதிமன்றத்திற்குமாக  இழுத்தடித்தும் மக்களின் வரிப்பணத்தைப் பாழ்படுத்தி வருகிறார்.

 

உயர்ந்த வருமானம் – மக்களுக்கு இல்லை, அரசாங்கத்துக்குத்தான் என்பது போல்  இருக்கிறது. இந்த அரசாங்கம்  இன்று  அறிமுகப்படுத்தியுள்ள ஜிஎஸ்.டி வரி முறை. இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள்  அதிகரித்துள்ளது. பொருட்களின் விலை விஷம் போல் ஏறிவருகின்றன. மக்கள் வரவுக்கும் செலவுக்கும் ஈடுசெய்யமுடியாத நிலையில் கடன்காரர்களாக வாழ வேண்டியுள்ளது.

 

அரசியல் சதுரங்கத்தில் இடம் மாறும்  ஆடும் புலியும்

 

கடந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் அதிகமான மலாய்க்காரர்களை வாக்காளர்களாகக் கொண்ட கிராமப்புறத் தொகுதிகளைப் பாரிசானின் அம்னோ வென்றது. அதன் பின் நடந்த இடைத்தேர்தல்களில் கணிசமான மலாய்க்கார வாக்காளர்களைக் கவர்ந்துள்ளதாகக் கூறி வந்தார் பிரதமர்.

 

பிரதமர் அமல்படுத்திய நம்பிக்கை கோட்பாடு, ஒரே மலேசியா உதவி தொகை போன்றவைக்குக் கிடைத்த வெற்றி என்று அரசாங்கச் சார்பு ஊடகங்கள் பறைசாற்றினாலும், பாரிசானுக்கு கிடைத்த வாக்குகள் நாட்டில் மலாய்க்காரர் தலைமைத்துவத்தை அம்னோ தொடர்வதற்கு அளிக்கும் ஆதரவு என்றும் இந்நாட்டின் அரசியல் உரிமையை மலாய்க்காரர்கள் தற்காத்துக் கொள்ள அவர்கள் தொடர்ந்து பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பெர்காசா போன்ற மலாய் தீவிரவாத அமைப்புகளின் இடைவிடாத பிரச்சாரமே காரணம் என மகாதீர் ஆதரவு இயக்கங்களும் கூறிவருகின்றன.

 

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர், முன்னாள் தலைமை நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பல செல்வாக்கு மிக்க மனிதர்கள் பலவிதங்களில் தங்கள் பங்களிப்பை அதற்கு வழங்கி வருகின்றனர்.

 

ஆக, மிக முக்கியமான இத்தருணத்தில், மலாய்க்காரர்களை அதிகமாகக்  கொண்ட இரண்டு இடங்களில் தேர்தல் நடக்கிறது. இப்பொழுது நடைபெறுவது இடைத்தேர்தல் என்பதாலும், பிரதமர் நஜிப்பின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து தோல்வி கண்டு வருவதாலும், அவர் மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஆடம்பரச் செலவுகள். மலாய் சமுகத்தின் பரிகாசத்திற்கு  ஆட்பட்டுள்ளது.

 

அதனைப் பொருட்படுத்தாமல்  பிரதமர் தொடரும் செயலைப் பகிரங்கமாக விமர்சிப்பதில் சில முன்னால் அமைச்சர்கள் உட்பட மகாதீரும் முனைப்பு காட்டுவதால் மலாய் சமுதாயத்தின்  வாக்குகள் திசை மாறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

அதேவேளையில் மக்கள் கூட்டணியின் முக்கியப் பங்காளியான  பாஸ் கட்சியின் ஒரு பிரிவினர்  இஸ்லாமிய ஹூடுட் சட்டதீர்மானத்தின் மீது கெஅடிலான் மற்றும் டிஏபி கொண்டுள்ள  கொள்கையை வன்மையாகக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

 

ஆக இரண்டு தரப்பிலும் சில பிணக்குகள் வெளிப்படையாகத் தென்படுவதால்  அடுத்த பொதுத் தேர்தலுக்கான மலேசிய மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதனைக் கணிக்கக் கூடியதாகவும், நாட்டின் அடுத்த தலைமைத்துவப் போராட்டம் மற்றும் அதன் கொள்கைகளை வரைய   இந்தத் தேர்தல் முடிவுகள் மிக அவசியம்.

 

இந்த  இரண்டு பிரிவுகளுக்கும்  அப்பால் மூன்றாம் பிரிவாக வாழும் மற்ற இன, சமய மலேசியர்களுக்கு  இது மிக முக்கியமான ஒரு தேர்தல் XavierJayakumarஎன்பதால் முழு அளவில் இந்தியர்கள் திரண்டுவந்து பக்காத்தான் வேட்பாளருக்கு  வாக்களிக்க வேண்டும்.

 

காரணம், இப்பொழுது அரசியல் நடப்புகளின் பார்வையாளர்களாக மட்டும் இருந்து விட்டால் பிற்காலத்தில் நமது பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதையும் காணும் பார்வையாளர்களாக நாம் இருக்க நேரிடும்.

 

சிறிது காலம் அமைச்சரவையிலும், பின்பு நாட்டின் துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்த போது நாட்டின் வளம், அம்னோவில் அரசியல் அதிகாரம் கொண்ட மேற்குடியைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் கையில் சிக்கிக் கொண்டிருப்பதையும், அது நாடாளுமன்ற ஜனநாயகம் கட்சி என்ற கட்டமைப்பு மூலம் பரிவர்த்தனை ஆவதையும் உணர்ந்தவர் அன்வார் இப்ராஹிம்.

 

பல இன மக்களுடன் இணைந்து நாட்டின் உண்மையான மேம்பாட்டுக்கு அன்வார் ஆற்றிவந்த அரசியல் பணியை மட்டும் தடுப்பதாக இல்லாமல், நாட்டில் மலிந்து கிடக்கும் ஊழல், அதிகாரத்துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்குச் சலுகை, இன மற்றும் சமயப் பாகுபாடு, ஊதாரித் தனம், சோம்பேறி தனம், கையாடல், சுரண்டல் போன்ற எண்ணற்ற வழிகளில் நாட்டின் செல்வம் அழிக்கப்படுவதைத் தடுக்க அன்வார் தொடுத்த போராட்டத்திற்கே மீண்டும் அவருக்குக் கிடைத்தது இந்தத் தண்டனை.

 

அதனால், இத்தேர்தலில் பக்காத்தான் வெற்றி நீதியின் வெற்றியாகும், எதிர்க்கட்சிகளின் முன்னணியான பக்காத்தானை மேலும் பலப்படுத்தவும் இரண்டு கட்சி போட்டித்தன்மையின் வழி நாட்டின் மேம்பாட்டைத் துரிதப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல இந்த வெற்றி உதவும்.

 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்தக் கருத்தைத் தோற்றுவிக்க அதிகாரமும், அனுபவமும், மதிப்பும் மிக்க ஒரு தலைவர் தேவை, அதற்கு டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயிலே சிறந்தவர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பணத்திற்கோ கௌரவத்திற்கோ அன்றி அநீதியை எதிர்த்துக் கடந்த 18 ஆண்டுகளாக அவரின் குடும்பமே நடத்தும் போராட்டத்தில் எதிர்க்கட்சி முன்னணியிடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டைப் பலப்படுத்த இந்தத் தேர்தல் வெற்றி உதவும். ஆகவே, இந்தியர்களின் வாக்குகளை டாக்டர் வான்  அஸிஸா இஸ்மாயிலுக்கு வழங்க ஒவ்வொரு இந்தியரும் முனைய வேண்டும்.