கைதி தூக்கில் தொங்கிய சம்பவத்தில் தப்பு நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை

prisonமே  22-இல், குளுவாங் சிறையில்  கைதி  ஒருவர்  தூக்கிலிடப்பட்ட  நிலையில் காணப்பட்ட  சம்பவத்தில்  சூது  எதுவும்  நிகழ்ந்திருக்க  வாய்ப்பில்லை  என்பதைச்  சிறைத்துறை  உறுதிப்படுத்தியுள்ளது.

தூக்கில்  தொங்கியவரின்  கழுத்தில்  மட்டுமே  சிராய்ப்புகள்  காணப்படுவதாக  கொரோனரும்  சிறைத்துறை  தலைமையகமும்  மேற்கொண்ட  சோதனைகள்  காட்டுவதாக  சிறைத்துறை  துணை  இயக்குனர்  சுப்ரி  ஹஷிம்  கூறினார்.

“துக்கிலிடப்பட்டதால்  மரணம்  நிகழ்ந்திருப்பதைப்  பிணப் பரிசோதனை  காண்பிக்கிறது”, என்றார். தமிழ்  நாளேடுகள் பலவற்றிலும்  வெளிவந்த  செய்திகளுக்கு  எதிர்வினையாக  அவர்  இவ்வாறு கூறினார்.

சுங்கை  பூலோவில்  அன்வார்  இப்ராகிமுக்கு  அளிக்கப்படும்  மருத்துவ  சிகிச்சை  பற்றிக்  கருத்துரைத்த  சுப்ரி,  எல்லாக்  கைதிகளுமே   அவர்கள்  சிறைக்குள்  அடியெடுத்து  வைக்கும்போதும்  பிறகு  அவ்வப்போதும்  மருத்துவ  அதிகாரியால்  சோதிக்கப்படுவார்கள்  என்றார்.

“கைதிகளுக்குச்  சிறைக்கு  வெளியில், நிபுணர்கள்  உள்பட  மருத்துவ  மனைகளின்  கவனிப்பு  தேவை  என்றால்  மருத்துவ  அதிகாரியே  அனுப்பி வைப்பார்”, என்றார்.

மருத்துவ  அதிகாரி  பரிந்துரைத்தால் கைதிகள்  மேல்சிகிச்சைக்காக  மருத்துவ  மனைகளுக்கு  அனுப்பப்படுவதைச்  சிறைத்துறை  தடுத்ததே  இல்லை  என்றவர்  தெரிவித்தார்.