அல் ஜசீரா அல்டான்துன்யா ஆவணப் படத்தைத் தற்காத்துப் பேசுகிறது

jollyஅல் ஜசீரா  அதன்  செய்தியாளர்  மேரி  என்  ஜோலி படைத்த ‘Murder in Malaysia’(மலேசியாவில்  கொலை)  ஆவணப்  படத்தில்  எந்தக்  குறையும்  காணவில்லை.

மங்கோலிய  பெண்ணான  அல்டான்துன்யா  ஷரீபுவின்  கொலையை  ஆராயும்  அந்த  ஆவணப்  படத்தைத்  தயாரித்ததில்   எந்த  உள்நோக்கமும்  கிடையாது  என  அத்தொலைக்காட்சி  நிலையப்  பேச்சாளர்  ஒருவர்  டோஹாவில்  கூறினார்.

‘Murder in Malaysia’, பல  கேள்விகளுக்கு  விடை  காணப்படாமல்  இன்னமும்  மர்மமாக  விளங்கும்  அக்கொலையை  விரிவாக  ஆராயும்  ஒரு  ஆவணப்  படமாகும்.

“அப்படம்  உண்மைகளை விவரிக்கிறது. அதே  வேளையில்  புதிய  செய்திகளையும்,  குறிப்பாக  இப்போது  ஆஸ்திரேலியாவில்  உள்ள  சிருல்  அஸ்ஹார்  உமர்  தொடர்பான  செய்திகளையும்  கவனத்துக்குக்  கொண்டு  வருகிறது”,  என  அப்பேச்சாளர்  மலேசியாகினிக்கு  அனுப்பி  வைத்த  மின்னஞ்சலில்  கூறினார்.

அல் ஜசீரா ஊடகச்  சுதந்திரத்தை  மதிக்கிறது  என்றும்  அது   சிறப்பாகவும்  நியாயமாகவும்  செய்திகளை  வழங்கும்  அதன்  செய்தியாளர்கள்  பக்கமே  எப்போதும்  நிற்கும்  என்றும்  அவர்  கூறினார்.

அதே  வேளை, அப்படம்மீது  விசாரணை  நடத்தும்  மலேசிய  அதிகாரிகளுடன்  ஒத்துழைக்கவும்  அல்  ஜசீரா  தயாராக  உள்ளது  என்றாரவர்.